அண்மையில் தமிழகத்திலிருந்து மனிதநேயச் செயற்பாட்டாளரான திரு அர்சுன் சம்பத் குழுவினர் இலங்கைக்கு சென்றுவந்து தங்கள் அனுபவப்பகிர்வுகளை தமிழக ஊடகங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்திலிருந்து இலங்கை வந்த இவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டும் மக்களுடன் உரையாடியும் தகவல்களை திரட்டியுள்ளனர். உரிமைகள் அனைத்தையும் இழந்து மிருகங்களை விட கீழான நிலையில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக்கு எங்கள் பாரததேசமும் முக்கிய காரணியாக விளங்கியுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது என கொதிப்படைந்திருக்கும் திரு சம்பத், இலங்கையை வளப்படுத்தியதிலும் வலுப்படுத்தியதிலும் இலங்கை பூர்வகுடி தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இலங்கைக்கு விடுதலை வாங்கித் தருவதிலும் தமிழர்களின் பங்கே முதன்மையானது. ஆனால், தமிழர்களின் பூர்வீக பூமியான இலங்கையில் அனைத்து உரிமைகளையும் இழந்து, மிருகங்களுக்கும் கீழான நிலையில் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியபோது, விதியே விதியே என் செய்ய நினைத்தாய்; எம் தமிழ்ச் சாதியை! என்கிற பாரதியின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வந்தது. என ஆதங்கப்பட்டார்......."
அவரின் நேரடி அனுபவத்தினை இங்கு பதிவுசெய்கின்றோம்
இலங்கையில் உள்ள திருக்கோயில்களைத் தரிசனம் செய்வதற்காகவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை நேரடியாகச் சந்தித்து உண்மை நிலைவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் கடந்த 11.5.2010 ஆன்மிக இயக்கங்களைச் சேர்ந்த 6 பேருடன் சென்னையில் இருந்து கொழும்பு சென்றேன்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிபந்தனை நாளதுவரை இருக்கிற காரணத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தோம். 2 நாட்களாக நாங்கள் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை. எனவே, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 நெடுஞ்சாலை வழியாக ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் அனுமதி பெற முயற்சிக்கலாம் என்கிற செய்தி தெரிந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமானோம்.
யுத்தம் முடிந்து, ஓராண்டு நிறைவு பெற்றபிறகும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இலங்கை உள்ளதை நேரடியாகக் காணமுடிந்தது. ஆங்காங்கே இராணுவ முகாம்களும் இராணுவக் காவல் மையங்களும் இராணுவச் சோதனைச் சாவடிகளும் ஏராளமாக இருந்தன.
ஓமந்தையிலும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சர்வதேச சமூகத்தினருக்கும் சமீபத்தில் இலங்கைத் தேர்தலில் வென்ற இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட இப் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
பொதுவாக, இலங்கை முழுவதும் ராஜபக்ஷவின் புகழ்பாடும் விளம்பரங்களே காணப்படுகின்றன. இலங்கை இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளும் தமிழ் மக்களைச் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர். சிங்கள பெரும்பான்மைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைந்துள்ளன. யுத்தப் பாதிப்பு மனோ நிலையில் இருந்து தமிழர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. தனிப்பட்ட முறையிலும் பொதுவாகவும் தமிழர்களுக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதுகுறித்து அரசு நிர்வாகத்திடம் புகார் செய்வதற்குக் கூட பயந்து வியாபார நிறுவனங்களோ, விவசாய நிலங்களோ (காணிகள்) சிங்களவர்களால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை வேடிக்கை பார்க்கும் துன்பகரமான சூழ்நிலையில்தான் தமிழர்கள் இன்று உள்ளனர்.
இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான இந்துக் கோயில்கள் உள்ளன. இதில் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தோடு தொடர்புடைய கோயில்கள் ஏராளமாக உள்ளன. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்களும் உள்ளன. யுத்தத்தின்போது தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் தாக்கப்பட்டன. சில கோயில் வளாகங்களை முகாம்களாகக் கூட பயன்படுத்தினர். சிதிலமடைந்த பல கோயில்களை வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் உதவியுடன் இயன்ற அளவு சீரமைத்து வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் யுனிசெவ் வாகனங்களும் கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களின் வாகனங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஐ.நா.சபை சார்பில் மனிதாபிமான உதவி நிதியத்தில் சுமார் 1600 கோடி ரூபா இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது. அதில் வெறும் 40 கோடி ரூபா மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள தமிழர்கள் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் மாணவர்களில் 26 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே யுத்தத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களுடன் உரையாடுகையில்;
கடந்த ஆண்டு உக்கிரமாக நடந்து வந்த இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூட இந்தியா இது விடயத்தில் தலையிட்டு ஏதேனும் ஒரு வகையில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்தும், இந்தியா தங்களைக் காப்பாற்றும் என எதிர்பார்த்துக் காத்திருந்து தமிழ் மக்கள் ஏமாந்து இருக்கின்றனர். இந்தியா நம் தாய்நாடு. இந்திய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டார்கள் என்றும் இந்தியக் கப்பல்கள் இன்றுவரும் நாளை வரும் என்றும் அப்பாவிகளான தங்களைக் காப்பாற்றும் என்றும் கடைசி நொடிவரை எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர்.
புலம்பெயர்ந்து வருகின்ற வழியில் இலங்கை இராணுவத்தினரின் மத்தியில் இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய இராணுவத் தளபாடங்களைக் கண்டுபெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக இந்தியாவின் மீதும், தமிழக அரசியல்வாதிகள் மீதும் கடும் வெறுப்புணர்வு அவர்கள் மத்தியில் உருவாகி இருப்பதை எங்களால் காண முடிந்தது.
உறவினர்களோடு சென்று சேர முடியாதவர்கள், காயம்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர். யுத்தத்துக்குப் பிறகு காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் ஏராளம். மகனைத் தேடி அலையும் பெற்றோர்களும் கணவரைத் தேடி அலையும் தாய்மார்களும் ஏராளமாக உள்ளனர். சுமார் 15 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான கறுப்புச் சட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருப்பதால் தமிழர்கள் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர். இலங்கை அரசின் நீதித்துறை முழுமையாக இயங்குவதில்லை.
தமிழர்களுக்கு நீதி கிடைப்பது இல்லை. இலங்கை அரசுப் பணிகள், இராணுவப் பணிகள், காவல்துறைப் பணிகள், நிர்வாகப் பணிகள் ஆகியவற்றில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே தமிழர்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. அதில், 5 ஆயிரம் ரூபா மட்டுமே குடும்பங்களுக்குக் கிடைத்துள்ளது.
இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 30 நாட்களுக்கு என வழங்கப்படும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் 15 நாட்களுக்குள் தீர்ந்துவிடுவதாகக் கூறுகிறார்கள். முகாம்களில் உள்ளே சென்று யாரையும் சந்திக்க வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த மாதத்தில் இருந்து முகாம்களில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பிவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தகைய ஒருசிலரிடம் எங்களால் பேசி விபரங்களைச் சேகரிக்க முடிந்தது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பலரை மீள்குடியேற்றம் என்கிற பெயரில் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்படி நிர்ப்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை. புதிய தாற்காலிக வீடுகளை அமைப்பதற்கு ஐ.நா. சபையின் சார்பில் தகரங்களும் தார்பாலின்களும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் சார்பில் ஒரு குடும்பத்துக்கு 20 ஆயிரம் ரூபா வைப்பு நிதியாகக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்நிதி எந்தக் குடும்பத்துக்கும் சென்று சேரவில்லை.
இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் வழங்கியுள்ள கட்டுமானப் பொருட்களும் நிவாரணப் பொருள்களும் தமிழர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக பெரும்பான்மை சிங்களப் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் சிங்களப் பகுதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழர் பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. தமிழக அரசால் செய்யப்பட்ட உதவிகள் கூட தமிழர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதே உண்மை நிலை.
இந்துக் கோயில்களை புத்த விகாரைகளாக மாற்றும் முயற்சிகள் காணப்படுகின்றன. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட பாடல் பெற்ற திருக்கோயில்களைச் சுற்றி திட்டமிட்ட ரீதியல் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். அரச மரத்தடியில் உள்ள விநாயகர் சிலைகளை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் பௌத்த அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டு தமிழர்களின் தொன்மைச் சின்னங்களையும் சமய அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் அரசாங்கம் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்ப் பெயர் தாங்கி நிற்கும் ஊர்களின் பெயர்கள் கூட சிங்கள பௌத்த பெயர்களாக மாற்றப்படுகின்றன.
வவுனியா, திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது சீனா, ஜப்பான் போன்ற பௌத்த நாடுகள் புதிதாக உருவாக்கிய சில தொழிற்சாலைகளைக் காண முடிந்தது. திருகோணமலையில் சீன கடற்படைத் தளங்களையும் காணமுடிந்தது.
போரால் பாதிக்கப்பட்ட ஈரான், ஆப்கான், உள்ளிட்ட நாடுகளில் இந்திய அரசு நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளைச் செய்துவருகிறது. ஆனால், இதுவரை எந்தவிதமான நிவாரணப் பணிகளையும் நேரடியாக இலங்கையில் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
மத்திய தமிழக அரசுகள் சார்பில் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்பது குறித்தும் சரிவர கண்காணிக்கப்படவில்லை. மேலும் இந்திய அரசின் சார்பிலோ தமிழக அரசின் சார்பிலோ அதிகாரபூர்வமாக எந்தவொரு குழுவும் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று உண்மை நிலைவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதும் வேதனைக்குரியது.
இலங்கையை வளப்படுத்தியதிலும் வலுப்படுத்தியதிலும் இலங்கை பூர்வகுடி தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இலங்கைக்கு விடுதலை வாங்கித் தருவதிலும் தமிழர்களின் பங்கே முதன்மையானது. ஆனால், தமிழர்களின் பூர்வீக பூமியான இலங்கையில் அனைத்து உரிமைகளையும் இழந்து, மிருகங்களுக்கும் கீழான நிலையில் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியபோது, விதியே விதியே என் செய்ய நினைத்தாய்; எம் தமிழ்ச் சாதியை! என்கிற பாரதியின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வந்தது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen